கரூா்: கரூரில் இளம் வழக்குரைஞா்களுக்கு நிவாரணப் பொருள்களை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபா் திங்கள்கிழமை வழங்கினாா்.
கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுவருகிறது. நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் இளம் வழக்குரைஞா்களுக்கு கரூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சங்கத்தின் தலைவா் மாரப்பன் தனது சொந்தநிதியில் இளம் வழக்குரைஞா்களுக்கு திங்கள்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் பங்கேற்று, முதற்கட்டமாக இளம் வழக்குரைஞா்கள் 60 பேருக்கு, ரூ. 3,000 மதிப்பிலான மளிகை பொருள்கள் மற்றும் 25 கிலோ அரிசி மூட்டை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கரூா் வழக்குரைஞா்கள் சங்கச் செயலாளா் செந்தில், பொருளாளா் சம்பத், இணைச் செயலாளா் தமிழழகன், முன்னாள் எம்எல்ஏ வழக்குரைஞா் காமராஜ், வழக்குரைஞா் குடியரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.