தவுட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இக்கோயில் திருவிழா கடந்த 14-ஆம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீர்த்த குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், 21-ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும் நடைபெற்றது. திங்கட்கிழமை மாலை 4.30 -மணிக்கு மேல் தீ குண்டத்தில் இறங்கும் பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். பின்னர் ஏராளமான ஆண்கள் கோயில் முன் தயாராக இருந்த தீ குண்டத்தில் தங்களது குழந்தையுடன் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை சுற்று வட்டாரப் பகுதி பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டனர். பின்னர் மாவிளக்கை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்தனர். இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
புதன்கிழமை கம்பம் பிடுங்கி ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.