கரூர்

குளித்தலை அருகே தந்தை, மகன் வெட்டிக்கொலை

30th Jul 2019 09:51 AM

ADVERTISEMENT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே திங்கள்கிழமை காலை முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
    குளித்தலையை அடுத்த முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை(65). விவசாயி. இவரது மனைவி தாமரை (60), மகன் நல்லதம்பி(45). நல்லதம்பி தனது தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார். 
நல்லதம்பி, அதேபகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை 20-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் கடந்த 24 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவின்பேரில் குளித்தலை வட்டாட்சியர், சர்வேயர் உள்ளிட்டோர் குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்துள்ளனர். 
இந்நிலையில் திங்கள்கிழமை  காலை 8 மணியளவில் போதாவூர்-மூலப்பட்டி சாலையில் முதலைப்பட்டி அருகே தனது பைக்கில் வந்துகொண்டிருந்த நல்லதம்பியை மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. பின்னர் பேரன் பொன்னரை பள்ளி வேனில் அனுப்புவதற்கு, வீட்டின் அருகே காத்திருந்த  வீரமலையையும் அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்தது.  
இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன், குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் சுகுமார் மற்றும் குளித்தலை போலீஸார் சம்பவ இடங்களுக்குச் சென்று இருவரது சடலத்தையும் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மர்மநபர்கள் விட்டுச் சென்ற 3 அரிவாள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
உயிரிழந்த நல்லதம்பிக்கு மனைவி தமிழரசி(39), மகன் பொன்னர்(12), மகள் இனியா(10) ஆகியோர் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT