இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் சமூக ஆர்வலர் முகிலன் திங்கள்கிழமை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை ஆக. 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன்(52). சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முகிலன் அரவக்குறிச்சியை அடுத்த சீத்தப்பட்டி காலனியில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிச.16-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினாராம். இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து முகிலன் மீது கரூர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஏப்.23-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் இருந்து திங்கள்கிழமை அழைத்துவரப்பட்ட முகிலன் கரூர் நீதிமன்றம் 1-இல் நீதிபதி விஜய்கார்த்திக் முன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கினை ஆக.9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.