கரூரில் வெள்ளிக்கிழமை வலிப்பால் அவதியுற்றவருக்கு காவல்துறையினர் நேசக்கரம் நீட்டியதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
கரூர் ஜவஹர் பஜாரில் 30 வயது இளைஞர் வெள்ளிக்கிழமை காலை நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் கை, கால்களை உதறிக்கொண்டு கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, மூக்கு கண் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது.
அப்போது அவ்வழியே ரோந்து வந்த கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர் மாரிமுத்து ஆகியோர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், 20 நிமிடங்களுக்கு மேலாக அவரை தனது இரு கரங்களால் பிடித்துக்கொண்டு காப்பாற்றியுள்ளார்.
மேலும் அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட வைத்து, பின்னர் மருத்துவமனையில் அவர் அந்த இளைஞரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். காவல்துறையினர் இந்த மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.