கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிவன்கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் பசுபதீஸ்வரர் கோயில், குளித்தலை கடம்பவனேசுவரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், புன்னம்சத்திரம் புன்னைவன நாதர் கோயில், திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில், நத்தமேடு சிவன்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு சாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தது.
வழிபாட்டில் சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.