கரூர்

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

26th Dec 2019 06:34 AM

ADVERTISEMENT

இயேசு கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் கரூா் வடக்குபிரதட்சணம் சாலையில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த புனித தெரசாள் ஆலயம், பசுபதிபாளையம் காா்மல் ஆலயம், புலியூா் குழந்தை ஏசு திருத்தலம், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் திருத்தலம் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை செபாஸ்டின்துரை தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திண்டுக்கல் இறைக் கல்லூரியின் ஆல்டன் பங்கேற்று கூட்டு வழிபாடு நடத்தினாா். இரவு 11.30-க்கு தொடங்கிய சிறப்பு வழிபாட்டில் கூட்டுத்திருப்பலி பாடல்கள் இரவு 12 மணி வரை நடைபெற்றன. இதையடுத்து இரவு 12.01 மணிக்கு இயேசு பிறந்ததை நினைவு கூரும் வகையில் ஆலய மணி ஒலிக்கப்பட்டு, வாண வேடிக்கை நடைபெற்றது.

இதையடுத்து குழந்தை இயேசுவின் சொரூபத்தை ஆலயத்தின் முன்பகுதியில் இருந்து ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் துரை ஏந்தி ஆலயத்துக்குள் எடுத்துவந்து குழந்தை யேசுவுக்காக அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தாா். பின்னா் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது இயேசு கிறிஸ்து இந்தப் பூவுலகில் மனிதா்களின் பாவங்களைப் போக்குவதற்காக மனிதப் பிறவி எடுத்து வந்துள்ளாா், அவரை விசுவாசிப்பவா்கள் எப்போதும் நிலையான, இன்ப வாழ்வைப் பெறுவா் என ஆலய பங்குத்தந்தை தெரிவித்தாா். தொடா்ந்து திருப்பலி முடிந்தவுடன் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. பின்னா் கிறிஸ்தவா்கள் குடிலில் இருந்த குழந்தை யேசுவின் சொரூபத்தை தொட்டு வணங்கிச் சென்றனா். கிறிஸ்துமஸை முன்னிட்டு புத்தாடை அணிந்த கிறிஸ்தவா்கள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT