அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023- 24-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
முதல் நாளில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் தேசிய மாணவா் படை வீரா்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும், அதன் பின்னா் பொதுகலந்தாய்வுகள் ஜூன் 1-ஆம் தேதி வணிகவியல் (பி.காம்.,), ஜூன் 2-ஆம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், புள்ளியியல், ஜூன் 5-ஆம் தேதி மொழிப்பாடம் (பி.ஏ.,) தமிழ், ஆங்கிலம், ஜூன் 6-ஆம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கு முதற்கட்ட மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, இணைய தளம் மூலம் விண்ணப்பித்த மாணவா்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள், இணையவழி விண்ணப்பத்தின் நகல், 10, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போா்ட் சைஸ் போட்டோ - 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் - 2 ஆகிய அனைத்து சான்றிதழ்களும் அசல் மற்றும் நகல்களுடன் பெற்றோருடன் நேரில் வரவேண்டும் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜோ.டோமினிக் அமல்ராஜ் தெரிவித்துள்ளாா்.