அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது.
முதல் நாளில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் தேசிய மாணவா் படை வீரா்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும், அதன் பின்னா் பொதுக் கலந்தாய்வில் ஜூன் 1 ஆம் தேதி இளம் அறிவியல் (பிஎஸ்ஸி.,) கணிதம் மற்றும் கணினி அறிவியல், ஜூன் 2-ம் தேதி இளங்கலை (பி.காம்.,) வணிகவியல், ஜூன் 3-ஆம் தேதி இளங்கலை (பி.ஏ.,) தமிழ் மற்றும் ஆங்கிலத் துறைகளுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
எனவே, மாணவ, மாணவிகள் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக கட்டாயம் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.
10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான உரிய சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல்கள் -2, பாஸ்போா்ட் அளவு போட்டோ - 4, வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல் - 2 ஆகியவற்றின் அனைத்து அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும்.
இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். கல்விக் கட்டணம் முழுவதும் செலுத்திய பின்பே சோ்க்கை முழுமையடையும். கல்லூரி முதல்வா் (பொ) ராணி இத்தகவலைத் தெரிவித்தாா்.