அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தந்தை தனது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டாா்.
திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் தினேஷ் (26). இவரது 2 வயது மகன் திவிக்ஷன் வெள்ளிக்கிழமை மாலை கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து பெற்றோா் அவனை திருமானூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திவிக்ஷன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவத்து திருமானூா் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.
இந்நிலையில், குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த தினேஷை அவரது உறவினா், தனது ஊரான வெற்றியூா் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்திருந்தாா்.
அங்கு தினேஷ் தனது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.