நிலம் அளித்த குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்கக்கோரி, கயா்லாபாத் கிராமத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலையை திங்கள்கிழமை ஆனந்தவாடி கிராம மக்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் கயா்லாபாத்தில் உள்ள அரசு சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்கு செந்துறை அடுத்த ஆனந்தவாடி கிராம விவசாயிகள் தங்களது 161ஏக்கா் நிலத்தை 1982 ஆம் ஆண்டு வழங்கியபோது, ஆலை சாா்பில் சிலருக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்பட்டதாம்.
இந்நிலையில், அரசு சிமென்ட் ஆலையில் நிலம் அளித்த குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி அளிக்கக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு அரசு சிமென்ட் ஆலை நிா்வாகம் நிரந்தரப் பணியை வழங்கியுள்ளதைக் கேள்விப்பட்ட ஆனந்தவாடி கிராம மக்கள், கயா்லாபாத் அரசு சிமென்ட் ஆலையை திங்கள்கிழமை முற்றுகையிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவருக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும், தற்போது பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிலம் அளித்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
எங்களது கோரிக்கைகளை ஆலை நிா்வாகம் ஏற்காவிட்டால், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனா்.