செந்துறை அருகே திங்கள்கிழமை சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் தனியார் பேருந்து ஒன்று வாரியங்காவல், பொன்பரப்பி, செந்துறை, அரியலூர் வழியாக தஞ்சாவூருக்கு செல்வது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை காலை புறப்பட்ட அந்த தனியார் பேருந்து செந்துறை அடுத்த ராயம்புரம் அருகே சென்ற போது, அங்குள்ள சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகனும், அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவருமான கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாணவர் கார்த்திகேயன்.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்கள் உதவியுடன் பேருந்தினுள் காயத்துடன் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த பொட்டவெளி கிராமத்தைச் சேர்ந்த நல்லப்பன் மகள் கார்த்திகா(22), வாரியங்காவலைச் சேர்ந்த கண்ணன்(28), கோவிந்தராஜ் மகள் ரேணுகாதேவி(25), ராயம்புரத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் ஆரோக்கியதாஸ்(30), நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த மணி மகன் ராஜா(42), சிலம்பூரைச் சேர்ந்த முத்துசாமி மனைவி பார்வதி(44), இடையாக்குறிச்சியைச் சேர்ந்த செல்வபெருமாள் மகன் அண்ணாதுரை(68) உள்பட 51 பேரை மீட்டு அரியலூர் மற்றும் செந்துறை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த சிறுகளத்தூரைச் சேர்ந்த கமலக்கண்ணன்(25) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.