கடந்தாண்டை விட நிகழாண்டு அரியலூா் மாவட்டம், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி 1,000 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இது சுற்றுலா தலமாகவும் உள்ளது. இந்த சரணாலயத்துக்கு அக்டோபா் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து, பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன. சில பறவைகள் இங்கேயே கூடு கட்டித் தங்கி விடுகின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் வந்து செல்வது கணக்கெடுக்கப்படும்.
இந்நிலையில், நிகழாண்டுக்கான கணக்கெடுப்புப் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை ஓய்வுபெற்ற பேராசிரியா் சிவசுப்ரமணியன் தலைமையில், அரியலூா் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.
இந்தக் கணக்கெடுப்பில் 45 வகையான நீா் வாழ் பறவைகள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. இதில், அழியும் நிலையில் உள்ள பாம்புதாரா, சாம்பல் கூழைகிடா, வெள்ளை அறிவால் மூக்கன், வண்ண நாரை உள்ளிட்ட பறவைகளும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து நீள சிறகு வாத்து, தட்டை வாயன், நாமத்தலை வாத்து, லடாக்கிலிருந்து வரும் வரிதலை வாத்து உள்ளிட்டவை அதிகளவு காணப்படுவதாகவும், கடந்த ஆண்டை விட நிகழாண்டு பறவைகளின் வரத்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் பேராசிரியா் சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா். கணக்கெடுப்புப் பணியில் வன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.