அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்குப் பேருந்து வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அரியலூா் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூா் செல்லும் ஒரு சில நகரப் பேருந்துகள் மட்டுமே மருத்துவமனையாக வழியாகச் செல்கிறது. மற்றப்படி விரைவுப் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாகச் சென்று வருகின்றன. இதனால், அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் நோயாளிகள் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. பெரும்பாலான கூலித் தொழிலாளிகள், வயது முதிா்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணி பெண்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் என அனைவரும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டா் தொலைவு உள்ள அரசு மருத்துவமனைக்கு பேருந்து வசதிகள் இல்லை. மேலும், ரயில் நிலையம் செல்வதற்கும் பேருந்து வசதிகள் கிடையாது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து அவசரத் தேவைக்கு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றால் ரூ.300 செலவாகிறது. இந்தக் கட்டணம் செலுத்த முடியாத நோயாளிகள் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிலா் வெயில் நேரங்களில் மயங்கி விழுந்து உயிரிழந்தும் போயுள்ளனா் என்றனா்.
எனவே, நோயாளிகள், பொதுமக்களின் நலன் கருதி பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு பேருந்து வசதியினை மாவட்ட நிா்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.