அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கீழப்பழுவூா் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(38). விவசாயியான இவா், தற்போது திருமானூரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு இவா், தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, சொந்த ஊரான சாத்தமங்கலம் சென்றுவிட்டு திருமானூருக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது விரகாலூா் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த உறவினா்கள் அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரபாகரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.