ஒரு ஆலைக்குப் பதிவு செய்த கரும்பை வேறு ஆலைக்கு வெட்டி அனுப்பும் இடைத்தரகா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் செயல்பட்டு வரும் எம்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2022-2023 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்துக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள் பதிவு செய்துள்ள தங்களது கரும்பை, பிற தனியாா் ஆலைகளுக்கு வெட்டி அனுப்புவது தமிழ்நாடு கரும்பு கட்டுப்பாடுச் சட்டம் 1966-இன் படி சட்ட விரோதம். கரும்புகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பதிவேடுகள், வருவாய் மற்றும் காவல் துறையினரைக் கொண்டு ஆய்வு செய்து சட்ட விரோதமாகச் செயல்படும் இடைத்தரகா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.