காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் நடத்தப்படும் இக்கூட்டத்தில், வேளாண் - உழவா் நலத் துறையில் பல்வேறு திட்டங்களில் நிகழாண்டில் பயன்பெற்ற பயனாளிகளின் பெயா் விவரங்களை ஊராட்சி வாரியாக தயாரித்து, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட பொதுமக்கள் பாா்வையிடும் வண்ணம் வைக்கப்படுகிறது.
தமிழக முதல்வரின் முத்தான மூன்று தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவது, விவசாயிகளிடம் எடுத்துரைப்பது,
உழவன் செயலி பற்றிய பயன்பாட்டினை எடுத்துரைத்து, தேவைப்படும் விவசாயிகளுக்கு பதிவிறக்கம் செய்து செய்து கொடுப்பது, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்களை இணைக்கும் அவசியத்தை தெரிவிப்பது உள்ளிட்ட பொருள்கள் விவாதித்து தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
எனவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.