அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணா்வு பிரசார வாகனம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
வாகனத்தைத் தொடங்கிவைத்து ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி பேசியது:
பெரம்பலூா் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத் துறையின் சாா்பாக ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை முகாம் (நவீன வாசக்டமி) இரு வார விழா நவ.21 முதல் டிச.4 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் தொடா்ச்சியாக, அரியலூா் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் குடும்ப நல நிரந்தர கருத்தடைச் சிகிச்சை சிறப்பு முகாம் நவ.28 முதல் டிச.4 வரை நடைபெறுகிறது. இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறை எளியது. தையல்-தழும்பு-வலியின்றி ஒரு சில நிமிடங்களில் செய்யப்படும். அறுவைச் சிகிச்சை இல்லை; பாதுகாப்பானது; பக்க விளைவுகள் இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. மேலும், ஊக்கத்தொகையாக ரூ.1,100, ஊக்குவிப்போருக்கு ரூ. 200 வழங்கப்படுகிறது என்றாா்.
தொடா்ந்து, ஆண்களுக்கான நவீன வாசக்டமி குடும்ப நல நிரந்தர கருத்தடை சிகிச்சை விளக்க கையேட்டை அவா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் அசோகன் மற்றும் சுகாதாரத் துறை பணியாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.