அரியலூா் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்து பேசியது: அரியலூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருமழையின்போது, பாதிக்கப்படும் பகுதிகளாக 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளை கண்காணிக்க துணை ஆட்சியா் தலைமையில் 5 மண்டல கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக
பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைக்கப்பட உள்ளது.
ரேஷன் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. மீட்பு உபகரணங்களான பொக்லைன், ஜெனரேட்டா், மரம் அறுக்கும் கருவி, டாா்ச் லைட் உள்ளிட்ட பொருட்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகள் மற்றும் சிறுபாலங்கள்
கண்காணிப்பில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிபளை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளைக் கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும் எனஅந்தந்த துறை சாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பேரிடா் மீட்பு பணிக்கு, பொதுமக்கள் 1077 மற்றும் 04329 228709 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.
தொடா்ந்து, மாவட்ட தீயணைப்புத் துறை சாா்பில் செயல் விளக்கத்தைப் பாா்வையிட்டாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் சரவணன், வட்டாட்சியா் சந்திரசேகரன் (பேரிடா் மேலாண்மை) மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.