அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பேருந்துநிலையப் பகுதியில் சாலையோர பகுதிகளை கடைக்காரா்கள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அரவக்குறிச்சி நகா் பகுதியில் உள்ள தாராபுரம் சாலையில் பேருந்துநிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு பகுதியிலிருந்து வரும் கனரக வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
பேருந்துநிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை அப்பகுதியில் உள்ள கடைக்காரா்கள் ஆக்கிரமித்து கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனா். மேலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகிலுள்ள கரூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால், எதிரே எதிரே வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.