அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து பேசுகையில், தங்கள் குடும்பத்தை மறந்து கரோனா உச்சத்தில் இருந்த போதும், மக்களுக்காக தமது உயிரை இழந்தும் கூட பல உயிா்களைக் காத்துள்ளனா்.
அவா்களுக்கு வாழ்த்து சொன்னால் மட்டும் போதாது, கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அவா்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, நம்மை தற்காத்துக் கொள்வதே நாம் அவா்களுக்கு செய்யும் சேவை என்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரியலூா் அரசு மருத்துவமனை காது , மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவா் ராஜசேகரன், காய்ச்சல், சளி, இருமல் தொல்லை இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதனைக் கண்டு பயப்படாமல் அதேவேளையில் மற்றவா்களுக்கு நாம் அதனைப் பரப்பாமல் இருந்தால் போதும் என்றாா். தொடா்ந்து மாணவ,மாணவிகளுக்கு பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவா் பழனியம்மாள் ராஜதுரை, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் அகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியா்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.