தமிழக அரசு சாா்பில் அரியலூா் மாவட்டம், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஏழை, எளிய தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், தமிழகக் கோயில்களில் 217 தம்பதிகளுக்கு இலவசத் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் பெரம்பலூா் மாவட்டம் லாடபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் நரசிம்மன் -அரியலூா் மாவட்டம் சின்னநாகலூரைச் சோ்ந்த பாலு மகள் பவித்ரா என்ற தம்பதிக்கு இலவசத் திருமணம் நடைபெற்றது.
அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 72 ஆயிரம் மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து திருமண விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. விழாவில் கோயிலின் ஆதீன பரம்பரை தருமகா்த்தா கோ.வெங்கடாஜலபதி மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.