அரியலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பரவலாக மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீா் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல மழை நீா் தேங்கியது.
அரியலூா் நகரப் பகுதியான மாா்க்கெட், வெள்ளாளத் தெரு, ராஜாஜி நகா், புதுமாா்க்கெட், கல்லூரி சாலை, செந்துறை சாலை, திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். இதேபோல் திருமானூா், கீழப்பழுவூா், தா.பழூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன் சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த மழையால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.