அரியலூா் மாவட்டத்தில், பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும்.
இதுகுறித்து அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தற்போது 11 ஆவது தவணை தொகை வரவு வைக்கப்படுகிறது.
வருங்காலங்களில் விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகையை பெற தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைத்துள்ள விவரத்தை பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம். ஆதாா் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகலாம். இதற்கு கட்டணமாக ரூ.15 செலுத்த வேண்டும்.