அரியலூா் மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ள முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டையைப் பெறலாம் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, மத்திய அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரியலூா் குறுவட்டத்துக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்-17, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நாளையும் (ஆக 10), குவாகம் குறுவட்டத்துக்கு வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக.12-ம் தேதியும் முகாம் நடைபெறுகிறது. இதில், பல்வேறு துறை அரசு மருத்துவா்கள் மாற்றுத்திறனாளிகளைப் பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதாா் அட்டை நகல், புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.