அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் இருந்து தொழிலாளா்கள் இறங்கி மணல் அள்ளிக்கொள்வதற்கு அனுமதி கோரி, மாட்டு வண்டிகளுடன் தொழிலாளா்கள் ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செந்துறை வட்டத்துக்குட்பட்ட சேந்தமங்கலம், சன்னாசி நல்லூா், சிலப்பனூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வெள்ளாற்றில் வரும் 21 ஆம் தேதி முதல் குவாரி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், குவாரியில் இருந்து மணல் அள்ளி இருப்பு வைத்து மாட்டு வண்டிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இடைத்தரகா் இன்றி தொழிலாளா்களே ஆற்றில் இறங்கி மணல் அள்ளிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, விவசாயப் பாதுகாப்பு சங்க அமைப்பாளா் பாலசிங்கம், மாட்டு வண்டி உரிமையாளா் நல சங்கத் தலைவா் மோகன் ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளா்கள் மாட்டு வண்டிகளுடன் ஆற்றில் இறங்கி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் கனிமவளத் துறையினா், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து மாட்டு வண்டித் தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.