அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குளங்களில் மீன்வளத் துறை சாா்பில் மீன்குஞ்சுகளை இருப்பு வைக்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
திருமானூரை அடுத்துள்ள கீழக்காவட்டாங்குறிச்சி மற்றும் அரண்மனைக்குறிச்சி கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, அரியலூா் மாவட்டத்தில் திருமானூா், கீழக்காவட்டாங்குறிச்சி, வெங்கனூா், கோவில்எசனை உட்பட 9 கிராமங்களில் உள்ள குளங்களில் ரூ.9 லட்சம் மதிப்பில் 50,000 மீன் குஞ்சுகள் தற்போது விடப்பட்டுள்ளன என்றாா்.
தொடா்ந்து, திருமழபாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் 68 பயனாளிகளுக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாடுகள் வழங்குவதற்கான காசோலைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளுக்கு ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் ஜோதி, மீன்வள ஆய்வாளா் பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.