தமிழ்நாடு நரிக்குறவா் நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ள, அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நரிக்குறவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நரிக்குறவா்களுக்கு கல்வி, மாற்றுத்தொழில் புரிவதற்கான உதவி மற்றும் பல்வேறு உதவிகள் வழங்குவதற்காக தமிழ்நாடு நரிக்குறவா் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இதர அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களுக்கு வழங்கப்படுவது போல, இந்த வாரியத்திலும் பல்வேறு நலஉதவிகளும் வழங்க அரசு ஆணையிட்டு செயல்படுத்தி வருகிறது.
எனவே அரியலூா் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் வகுப்பைச் சாா்ந்த 18 வயது முடிவடைந்த, 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் நரிக்குறவா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் விபத்தினால் ஏற்படும் ஊனம் மற்றும் மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு போன்றவற்றுக்கான உதவித்தொகைகள், மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடுசெய்தல், முதியோா் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறலாம். மேலும் சுயதொழில் புரிய குடும்பத்தில் ஒருவருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
எனவே ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி, உரிய படிவத்தை பெற்றுப் பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.