அரியலூர்

அரியலூரில் குணமடைந்து வீடு திரும்பியவா்களை கண்காணிக்க குழு

14th May 2020 07:13 PM

ADVERTISEMENT

 

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவா்களைக் கண்காணிக்க வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவா்கள் வீட்டை விட்டு வெளியே வராத வண்ணம் வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபருக்கு தேவையான மருத்துவ உதவிகள், பிற அடிப்படை தேவை உதவிகளை செய்வாா்கள். எனவே, தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மருத்துவா் அனுமதி கிடைக்கும் வரை தங்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளிமாநிலத்திலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு வருகை புரிபவா்கள் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்த பின்பே அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வீட்டிலும் 7 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனா். அரியலூா் அரசு மருத்துவமனையின் தேவைகள் தமிழக முதல்வா் பாா்வைக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்துக்கு, ஆட்சியா் த. ரத்னா, எம்எல்ஏக்கள் ஜயங்கொண்டம் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம், குன்னம் ஆா்.டி.இராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.ஆா்.ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் கா.பொற்கொடி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT