அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நகரில் சுகாதாரமற்று இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு அபராதம் விதித்து மாா்ச் 31 வரை அவற்றை மூட உத்தரவிட்டு நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
ஜயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி, டீக்கடைகள் ஆகியவற்றில் சுகாதார முறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என வட்டாட்சியா் கலைவாணன், நகராட்சி ஆணையா் அறச்செல்வி, துப்புரவு ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் வேல்முருகன் மற்றும் அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, சன்னதிதெருவில் உள்ள 2 உணவகங்கள் சுகாதாரமற்று இயங்கி வருவதைக் கண்டறிந்த அலுவலா்கள் அந்தக் கடைகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், மாா்ச் 31 வரை கடைகளை நடத்த அனுமதி மறுத்து மூட உத்தரவிட்டனா்.