ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அரியலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
செப்டம்பர் 1 முதல் 30 ஆம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 6 வட்டாரங்களிலும் ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி, கோலப்போட்டி, ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை ஆட்சியர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார். இப்போட்டியில் முக்கிய அம்சமாக 3.5. கி.மீ முழுவதுமாக ஓடிய 1ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஜி.சிவானிக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் ஓட்டமானது, பிரதான வழியாகச் சென்று ஆட்சியரகத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் என்.சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.