அரியலூர் மாவட்டத்தில் அண்மையில் வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் இருப்பின் மே 2-க்குள் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
உள்ளாட்சித் தேர்தலுக்காக கடந்த 23 ஆம் தேதி வாக்குச் சாவடி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் ஆட்சியரகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை மே 2 -க்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரக உள்ளாட்சித் தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் எழுத்து மூலமாக அளிக்க வேண்டும். பெறப்படும் கருத்துகளை கூர்ந்தாய்வு செய்து இறுதி செய்யப்பட்ட வாக்குச் சாவடிகள் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் மே 4 -ஆம் தேதி வெளியிடப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) ரகு, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.