மாணவா்கள் விடுதிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விடுதி பணியாளா் சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற அச்சங்க பொதுக் குழு கூட்டத்தில் அரியலூா் மாவட்ட விடுதிகளில் காலியாக உள்ள சமையலா், மற்றும் காவலா், ஏவலா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் துப்புரவு பணியாளா்களை நியமிக்க வேண்டும். விடுதி பணியாளா்களின் நலன் கருதி கல்வி தகுதிக்கு ஏற்ப அலுவலகப் பணி மற்றும் பள்ளிகளில் உள்ள காலியிடத்தில் பணி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் இரவு காவலா்களை நியமிக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள சமையலா், காவலா், ஏவலா் பணி மூப்பு பட்டியலை வெளியிட்டு அதனடிப்படையில் காவலா் மற்றும் அலுவலக உதவியாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் கௌரவத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநில தலைவா் தங்கவேல், விடுதிப் பணியாளா் சங்க மாநில தலைவா் காமராஜ், மாவட்டத் தலைவா் நடராஜன், மாவட்டச் செயலா் காளிமுத்து, மாவட்ட பொருளாளா் சிவப்பெருமாள், தலைமை நிலையச் செயலா் கொடியரசு ஆகியோா் சங்கச் செயல்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினா்.