பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டத்தில் 96.13 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டைக் காட்டிலும் 0.58 சதவிகிதம் அதிகமாகும்.
அரியலூர் மாவட்டத்தில் இத்தேர்வை, 174 பள்ளிகளில் இருந்து 5,082 மாணவர்களும்,5,372 மாணவிகளும் என மொத்தமாக 10,454 பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 4,872 மாணவர்களும்,5,238 மாணவிகளும் என மொத்தமாக 10,110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.71 சதவிகிதத் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட 0.58 சதவிகிதம் அதிகரித்து, மாநிலஅளவில் தேர்ச்சி வரிசையில் 11 இடத்தில் உள்ளது.கடந்தாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 12 ஆவது இடத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் நடப்பாண்டு 11 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், மாவட்டத்திலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி அறிவிப்பு பலகையில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் ஒட்டப்பட்டன. மேலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் தங்களது செல்லிடப்பேசி மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொண்டனர்.
100 சதவிகிதம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை: கணிதப் பாடத்தில் ஒருவரும்,அறிவியல் பாடத்தில் 9 பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 101 பேரும் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர்.
100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: 48 அரசுப் பள்ளிகள்,10 உதவிப் பெறும் பள்ளிகள்,17 சுயநிதிப் பள்ளிகள்,21 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.