அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில், எடை சரியாக உள்ள தராசைப் பயன்படுத்தி தானியங்களை எடைபோட வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் திங்கள்கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுற்றுப்புறக் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நிலக்கடலை, உளுந்து, எள் உள்ளிட்ட பயறுவகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிக்காடு, அங்கராயன்நல்லூர், வரதராஜன்பேட்டை, மணப்பத்தூர், சுத்தமல்லி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வந்திருந்த நிலக்கடலை உள்ளிட்ட பயறு வகைகளை, திங்கள்கிழமை காலை முதல் வியாபாரிகள் மதிப்பீடு செய்து எடைபோடும் பணியை மேற்கொண்டனர்
அப்போது, எடைபோடும் தராசில் எடை குறைவு ஏற்படுவதாகவும், இப்பணியை உடனடியாக நிறுத்தக் கோரி விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.
சரியான எடை காட்டும் தராசு கொண்டுவந்து எடை போட வேண்டும். விளைப்பொருள்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். போதுமான இடமில்லாததால், விவசாயிகள் தங்களது தானியங்களை காத்திருந்து எடைபோட வேண்டியதுள்ளது. அதேபோல் பணம் கொடுப்பதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது என போராட்டத்தில் வலியுறுத்தினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்துக்கும் முற்பட்டனர்.
தகவலறிந்த வந்த ஜயங்கொண்டம் போலீஸார் மற்றும் பெரம்பலூர் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் முகமதுயூசுப்,தொழிலாளர் ஆய்வாளர் ஜெயராஜ் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, தராசு முத்திரை ஆய்வாளர் ராஜா, எடை இயந்திரப் பழுதுநீக்குநர் அங்கு வந்து எடை குறைவாக இருந்த தராசு இயந்திரத்தை விவசாயிகளின் முன்னிலையில் சரி செய்தனர்.பின்னர் எடை போடும் பணி மீண்டும் தொடங்கியது.