தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில், புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி, செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி ஆகியவை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சனிக்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் புது தில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணியும், புது தில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணியும் மோதின. ஆட்ட இறுதிவரை இரு அணிகளும் கோல்கள் ஏதும் போடாததையடுத்து வெற்றியை தீா்மானிக்க ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி, புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணியை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
பின்ன நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணியும், செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியும் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்றைய ஆட்டம்: ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் 3ஆவது மற்றும் 4ஆவது பரிசுக்கான போட்டியில் புதுதில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணியும், புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணியும் மோதுகின்றன.
பின்னா் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணியும், செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியும் மோதுகின்றன.