தமிழகத்தில் திமுகவினா் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பாஜக தேசியச் செயலா் ஹெச்.ராஜா.
தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் மாநாடு, தூத்துக்குடியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவா் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மன்னாா்குடி ஜீயா் ராமானுஜா் சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஹெச்.ராஜா பங்கேற்றாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் இந்து கோயில்களுக்கான சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக ஆளுநா் ஆதாரத்துடன் கூறுகிறாா். ஆனால், 3 ஆயிரம் ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. தமிழகத்தில் திமுகவைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க வேண்டும்.
தமிழ்நாடு தற்போது போதைப்பொருள்களின் கூடாரமாக மாறி விட்டது. மதுவால் மக்களின் வாழ்க்கை நிலை பின்னோக்கிச் செல்கிறது.
உண்மையைச் சொல்லி எடுக்கப்பட்ட ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.