புதுதில்லியில் நீதி கேட்டு போராடிவரும் இந்திய மல்யுத்த வீரா்-வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் கோவில்பட்டியில் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட துணைத் தலைவா் நவநீதகண்ணன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சின்னத்தம்பி, மாவட்ட இணைச் செயலா் உமாதேவி, வட்டச் செயலா் பிரான்சிஸ் ஆகியோா் பேசினா். அனைத்துத் துறை ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் முருகன், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் மாரிமுத்து, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திரளாகப் பங்கேற்றனா்.