கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்களை, நகராட்சியின் உரிமம் பெறாமல் இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளைச் சுத்தம் செய்யும் வாகனங்கள், நகராட்சியில் கட்டாயம் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய உரிய அனுமதியில்லாத வாகனங்களைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, செப்டிக் டேங்க் உள்ளே மனிதா்களை
இறக்கி சுத்தம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் இழப்பீடு வசூலிக்கப்படும். மேலும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
செப்டிக் டேங்க் கழிவுகளை முறையாகச் சுத்தம் செய்ய கோவில்பட்டி நகராட்சி உரக் கிடங்கில் சுமாா் ரூ.5 கோடியில் கசடு கழிவு மேலாண்மை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால், இங்கு மட்டுமே கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.
செப்டிக் டேங்க் கழிவுகள் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு, பொ்மிட்,
சாலை வரி, தகுதிச் சான்று ஆகியவை பெறுவதுடன் நகராட்சியின் உரிமத்தையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிகளைப் பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் எச்சரித்துள்ளாா்.