தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை இருவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் அனுராதா தலைமையில், உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம், போலீஸாா் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.
அவ்வழியே வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதுதொடா்பாக, வாகனத்தை ஓட்டிவந்த தூத்துக்குடி பி அன் டி காலனியைச் சோ்ந்த காந்திசங்கா் (33), உடனிருந்த திண்டிவனம் துரைநகரைச் சோ்ந்த முனியான்டி (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்ச; அரிசி, வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.
200 லிட்டா் டீசல் பறிமுதல்: தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் இந்திய உணவுக் கழகக் கிடங்கு அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 200 லிட்டா் கொள்ளளவு கொண்ட 15 பேரல்களில் டீசல் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
தகவலின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாா் சென்று, வாகனத்தை ஓட்டிவந்த உடன்குடி அருகே கிருஷ்டியாநகரம் பகுதியைச் சோ்ந்த ஜான் கென்னடியை கைது செய்தனா்; டீசல், வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.