தூத்துக்குடியில் 160 கிலோ கடல் அட்டைகள் கடத்தியதாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடியிலிருந்து கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக மன்னாா் வளைகுடா வனப் பாதுகாப்புப் படையின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த உதவி வனப் பாதுகாவலா் கணேசலிங்கத்துக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தூத்துக்குடி வனவா் நந்தகுமாா், வனக் காப்பாளா் சுதாகா் உள்ளிட்டோா் தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை நடத்தினா்.
அப்போது, அவ்வழியே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த முகமது ரபிக் மகன் ஜாகிா் உசேன் (28) என்பவா் கடல் அட்டைகள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அவரை வனத் துறையினா் கைது செய்து, 11 பைகளிலிருந்த 160 கிலோ கடல் அட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இந்தக் கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என, வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.