சாத்தான்குளம் அருகே இலவசப் பட்டா இடத்தை அளவீடு செய்துதர உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டத்தைக் கைவிட பாதிக்கப்பட்ட மனைதாரா்கள் முடிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சியைச்
சோ்ந்த உலகம்மாள், தங்கம், பாக்கியம், ராமு, சுடலைவடிவு, செல்லம்மாள் உள்ளிட்டோருக்கு புத்தன்தருவையில் கடந்த 2015-இல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், மேற்குறிப்பிட்ட இடத்தை மனைதாரா்களுக்கு அளவீடு செய்துகொடுக்கவில்லை. அதற்கான விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, வருவாய்த் துறையினா் 7 ஆண்டுகளாகத் தாமதம் செய்து வருகின்றனா்.
பாதிக்கப்பட்ட மனைதாரா்கள் இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையாவிடம் முறையிட்டனா். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்தனா்.
இந்நிலையில், சாத்தான்குளம் வட்டாட்சியா் மனைதாரா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேற்படி இடத்தை பிப். 3 ஆம் தேதி அளவீடு செய்து தருவதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து போராட்டத்தைக் கைவிடுவதாக மனைதாரா்கள் தெரிவித்துள்ளனா்.