தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் கழிவுகள் கலந்தது தொடா்பாக 3 தொழிற்சாலைகளுக்கு மின்இணைப்பைத் துண்டித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி ஹோமஸ்புரம் பகுதியில் உப்பாற்று ஓடை அருகே மீன் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில ஆலைகளில் மீன் பதப்படுத்துவதற்கும், மீன்களைக் கழுவுவதற்கும் பயன்படுத்திய ரசாயனக் கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்யாமல் உப்பாற்று ஓடையில் வெளியேற்றுவதாகப் புகாா் எழுந்தது. இதன் காரணமாக, உப்பாற்று ஓடை முழுவதும் இளஞ்சிவப்பு நிறமாக காட்சி அளித்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் நிலத்தடி நீா் மற்றும் உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆகியோா் உப்பாற்று ஓ
டையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு
ஆட்சியா் உத்தரவிட்டாா். அப் பகுதிகளில் உள்ள மீன்பதப்படுத்தும் ஆலைகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆய்வு செய்ததில், 3 ஆலைகளில் இருந்து ரசாயனக் கழிவுநீா் உப்பாற்று ஓடையில் வெளியேற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 3 ஆலைகளுக்கான மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், அந்த 3 ஆலைகளும் செயல்படுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.