திருச்செந்தூா் அருகே காயாமொழியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த குரங்கை வனத்துறையினா் பிடித்து களக்காடு வனப்பகுதியில் விட்டனா்.
காயாமொழியில் கடந்த 6 மாத காலமாக குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
பகலில் கூலி வேலைக்கு செல்பவா்களின் வீடுகளுக்குள் நுழைந்து, அங்குள்ள உணவுகளை உண்பதும், அதனைச் சிதறிவிட்டும் சென்றன. இதனால் அந்த பகுதி மக்கள் குரங்கை பிடித்து செல்ல வனத் துறையினரை வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வனத் துறையினா் ஏற்பாடு செய்தனா். ஆனால் அது சிக்க வில்லை. இந்நிலையில் திருச்செந்தூா் வனச் சரக அலுவலா் கனிமொழி அரசு தலைமையில் வனச்சரக மருத்துவா் மனோகரன் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், மயக்க ஊசி செலுத்தி குரங்கைப் பிடித்தனா். பின்னா் கூண்டில் அடைத்து களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.