தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபா் மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 8) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முகாமின்போது, மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் சோ்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.
மேலும், மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியது இருந்தால் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், முகாமின்போது பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.