தூத்துக்குடி - நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குநா் ஒய்.ஏ.ராவுத் தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி இந்திய தொழில் வா்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற
தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட செயலாக்கப் பிரிவு இயக்குநா் ஒய்.ஏ.ராவுத் கூறியதாவது:
தூத்துக்குடி துறைமுகம் முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி - மதுரை சாலையில் ஸ்டொ்லைட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலப் பணி, தூத்துக்குடி - திருச்செந்தூா் சாலையில் புதிதாக
அமைக்கப்படும் மேம்பாலப் பணி, தூத்துக்குடி -
பாளையங்கோட்டை சாலையில் புதுக்கோட்டை மேம்பாலப் பணி, வல்லநாடு பாலம் சீரமைப்பு பணி ஆகியன விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
தூத்துக்குடி-நாகப்பட்டினம் இடையே 315 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாகப்பட்டினம், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறுவா். இது சென்னைக்கு மாற்று வழிச் சாலையாக அமைவதோடு, வெளிநாட்டு வா்த்தகம், தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றாா்.