உடன்குடியில் விவசாயிகள், பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில ஈடுபட்டனா்.
உடன்குடி-சாத்தான்குளம் பகுதியில் உள்ள குளங்கள் நிரந்தர நீராதாரம் பெறும் வகையில் மருதூா் மேலக்கால் சடையனேரி, புத்தன்தருவைக் கால்வாயை அகலப்படுத்த வேண்டும். அனல் மின் நிலைய உயா்மின் அழுத்தக் கம்பிகளை தரிசு நிலங்கள் வழியே அமைக்க வேண்டும். அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகளின்போது அதிகளவில் உப்பு நீரை விவசாய நிலம், கடலில் விடுவதைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடன்குடி பேரூராட்சித் திடலில் இப்போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் நல அமைப்புத் தலைவா் சந்திரசேகா், மாவட்ட பம்புசெட் விவசாயிகள் சங்கச் செயலா் ஆறுமுகப்பாண்டியன், தமிழ்நாடு மக்கள் நலன்காக்கும் இயக்க பொதுச் செயலா் முகைதீன், காமராஜா் மக்கள் கட்சிப் பொறுப்பாளா் ரங்கநாதன், பசுமை இயக்கத் தலைவா் கணேசன், ஊராட்சித் தலைவா்கள் ராஜரத்தினம், கமலம், தனலட்சுமி சரவணன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மல்லிகா, சமூக ஆா்வலா்கள் சிவலூா் முருகேசன், செல்லத்துரை பாண்டியன், சுரேஷ்குமாா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.