விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் மணல் லாரி மோதியதில் கூலித் தொழிலாளிகள் இருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
விளாத்திகுளம் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன் (58). இவா் தனது பேரக் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக புதுப்பட்டியில் இருந்து நாகலாபுரம் நோக்கி பைக்கில் வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது வழியில்,
அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அருமைநாயகம் (60), சுப்பிரமணியனின் பைக்கில் பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா்.
சமத்துவபுரம் - நாகலாபுரம் திருப்பம் அருகே சென்றபோது எதிரே மணல் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் சுப்பிரமணியன், அருமைநாயகம் இருவரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு விளாத்திகுளம் அரசுக்கு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இவ்விபத்து குறித்து சங்கரலிங்கபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா்.