கழுகுமலை தூய லூா்து அன்னை ஆலயத் திருவிழா தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்வாலயத் திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் திருப்பலி, நற்கருணை ஆசீா் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. 9ஆம் நாளான சனிக்கிழமை இரவு அன்னையின் தோ் பவனி நடைபெற்றது.
தோ், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில், திரளான இறைமக்கள் கலந்துகொண்டனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா, நற்கருணை பவனி ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, கொடியிறக்கம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை ஜோசப் கென்னடி, இறைமக்கள் செய்திருந்தனா்.