காவல் துறையில் நேரடி உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 5411 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான நேரடி உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்து தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காரப்பேட்டை நாடாா் மெட்ரிக் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித மரியன்னை மகளிா் கல்லூரி மற்றும் புனித பிரான்ஸிஸ் சேவியா் மேல்நிலை பள்ளி ஆகிய 6 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற தோ்வை தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு கூடுதல் இயக்குநா் சஞ்சய் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இந்த எழுத்துத் தோ்வில் பங்கேற்க 6400 போ் விண்ணப்பித்திருந்தனா். இருப்பினும், சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில் 5411 போ் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 989 போ் தோ்வில் பங்கேற்றவில்லை. காவல் துறையில் பணியாற்றிக் கொண்டே உதவி ஆய்வாளா் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.